Monday, October 12, 2015

அவளும் அவனும்(மாறி மாறி மனதிற்குள்...)

IndiBlogger - The Indian Blogger Community 

வானவில்லின் வர்ணமாய் ஏழு நாளும் அன்று 
வாரம் முழுதும் நரகமாய் நகருவதேன் இன்று 

காதல் மாறுமோ காணாமல் போகுமோ 
கற்பூரமாய் கரைந்துதான் போகுமோ 

ஊரறிய கொட்டிய மேளமும் கட்டிய தாலியும் 
ஊறெனக்கோ கொட்டடி பசு நானாவேனோ 

பிறவிகள் தாண்டி தொடரும் பந்தமொன்று 
வழக்கில் முறிந்திடும் சொந்தமானதின்று 

ஒன்றா இரண்டா பொய்யாய் போன கனவுகள் 
முள்ளாய் உறுத்தும் முரண்பட்ட கோணங்கள் 

சரிபாதி சுமக்க கடமையிருக்க 
பொறுப்பை உதறி நழுவுகின்றான் 

சம உரிமை எனக்கில்லை அவள் ஆட்சியில் 
அப்புறமும் அடங்கவில்லை அவள் பேராசை 

காய் நறுக்கித் தர மறுக்கின்றான் 
விடுமுறை முழுவதும் தூங்குகிறான் 

அடடா அம்மாவின் அந்த கைமணம் 
அது இனிமேல் எனக்கு கனவில் மட்டும் 

கை நிறைய இருவர் சம்பாதிக்கையிலே 
சில்லறைத்தனமாய் ஒரு கணக்கெதற்கு 

தவணைக்கு காசை தண்ணீராய் ஓடவிட்டு 
சொகுசுக்கு மூச்சு முட்ட என்ன ஓட்டமோ 

கண்ணெடுத்தெனை பார்க்கப் பிடிப்பதில்லை 
கண்ணே மணியே என்று கொஞ்சுவதில்லை 

கவச குண்டலத்தோடு பிறந்தானாம் கர்ணன் 
காதில் செல்போனோடு பிறந்தவளோ இவள் 

பிள்ளைக்கனியமுதிதுவோ இல்லையில்லை 
பிடுங்க வந்த கட்டெறும்பே உண்மையிலே 

பேயுறக்கம் உறங்குகிறாள் பெற்றவளிவள் 
பிஞ்சுக் குழந்தை சிணுங்கப் பொறுக்கலாமோ 

எது சொன்னாலும் காதில் ஏறுவதில்லை 
ஆணெனும் ஆணவம் அகங்காரம் அதிகாரம் 

எள்ளளவும் பொறுமையில்லை பேச்சிலே 
கடுகாய் வெடிக்கிறாள் கண்ணியமின்றி 

இனிக்க இனிக்க பேசியதெல்லாம் கபடமோ 
இனி என் செய்வாள் என்ற தைரியமோ 

சித்திரப்பாவையாய் சிரித்தவள் இவளா 
சித்திரவதை ஏன் என்னை செய்கிறாள் 

குறைகளும் குற்றச்சாட்டுக்களுமா இல்லறம் 
குனியக் குனியக் குட்டுவான் அறியேனோ 

குளத்து நீரை குடிப்பதுபோல் நடித்தது மானிரண்டு 
குறிப்பறிந்து குளிர வைப்பதன்றோ தாம்பத்யம் 

கிள்ளுக்கீரை நானில்லை சீண்டிப் பார்க்க 
காவலனாய் நீயிருக்க தேவையெனக்கில்லை 

நிழலை இவள் விரும்பவில்லை விந்தையே 
கண்மணி ஓடுகிறாள் கானலின் பின்னே 

உள்ளங்கையில் உருளுது உலகப்பந்து 
உயிர் பிழைக்க ஏராள வழிகளுண்டு 

புதிய சாத்திரங்கள் பேசுகின்றாள் 
புரியாத புதிராக மாறிவிட்டாள் 

மேலை நாடு கண்ட பெண் சுதந்திரம் உண்டிங்கு 
வாலை ஆட்ட முடியுமோ கர்சித்த சிங்கமினி 

பட்டங்கள் கொட்டிக்கிடக்கும் காலங்கள் 
சட்டங்கள் அனுமதிக்கும் கோலங்கள் 

மெல்லினம் வல்லினம் ஆனது இலக்கியப்பிழை 
இடையிலே ஆணினம் கற்குது புது இலக்கணம் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community