Monday, October 12, 2015

கொலை

IndiBlogger - The Indian Blogger Community மதிய உணவு தந்த மயக்கமா 
அதனால் வந்த உறக்கமா 
அல்லது 
தூங்கா தொலைக்காட்சியின் 
தொடரில் அழுந்திய கவனமா 
அல்லது 
முப்பிறவி பயனா 
ஒருவரும் பார்க்கவில்லை 
என் வீட்டில் நடந்த விபரீதத்தை 

திட்டமிடாமல் திடீரென 
கொலை நடந்துவிட்டது 

பிரேதத்தை சடுதியில் மறைக்கவோ 
அல்லது 
புதைக்கவோ 
அல்லது 
எரிக்கவோ 
அல்லது 
புலாலுண்ணும் பறவைக்கிடவோ 

மதத்தை பார்ப்பேனோ 
அல்லது 
தப்பிக்கும் மார்க்கத்தையோ 

துரியோதனின் 'எடுக்கவோ கோர்க்கவோ' 
அல்லது 
பிள்ளை விளையாட்டு 'ஒத்தையா இரட்டையா' 
அல்லவே சுலபமான தீர்வங்கே 
சிக்கலான நிர்க்கதியல்லவோ 

காசியிலே கங்கைக்கரையிலே 
கரையுமோ இப்பாவம் 
அல்லது 
தானத்திலோ தர்மத்திலோ 
தீருமோ கர்மவினை 

பழியின்றி பிழைப்பேனோ 
அல்லது 
இழிநிலையை அடைவேனோ 

ரகசியத்தை காப்பேனோ 
அல்லது 
இருட்டறையில் தவிப்பேனோ 

பாதகத்தை மறப்பேனோ 
அல்லது 
பாழும் நெஞ்சில் சுமப்பேனோ 

என் செல்ல நாயே 
நீ பாவியா 
அல்லது 
அப்பாவியா 
யார் வீட்டு சேவலையோ கொன்றாயே 
நம் வீட்டு தோட்டத்தில் கண்டவுடன் 

இது விசுவாசமா 
அல்லது 
ரத்த வேட்டையா 

உன் காவல் திறனை பாராட்டவா 
அல்லது 
உன் முதுகில் அடி போடவா 

இது ஒப்புதல் வாக்குமூலமா 
அல்லது 
சுயசரிதையின் ஒரு பக்கமா 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community