Tuesday, October 13, 2015

சித்திரம்

IndiBlogger - The Indian Blogger Community

இனிய மாலை வேளையிலே
அருகிலிருக்கும் பூங்காவிலே
காலாற நடந்துவிட்டு
ஆங்கமர்ந்து காற்று வாங்கி
அமைதியில் திளைக்கையில்
கண்ணெதிரே ஓர் காட்சி
வரைந்த வண்ணச்சித்திரமாய்
விரிந்த விசித்திரமென்னே

ஆவலாய் கருத்தை இழுத்து
ஆர்வமாய் கவனம் கவர
பிறந்தது ஓர் பிரமிப்பு
எனக்குள் பெரும் வியப்பு

அங்கே புல்வெளியில்
ஓர் நடுத்தர வயது தம்பதி
உட்கார்ந்திருந்தனரே
கைகளை பின்னால் ஊன்றி
இரு கால்களை நீட்டி
ஆடவன் அமர்ந்திருக்க
அவன் முகம் பார்த்தபடி
பக்கவாட்டில் திரும்பி
அமர்ந்தபடி அவள்
மிகையில்லா ஒப்பனை
பாங்கான பட்டுச்சேலை
பளிச்சென்ற தோற்றம்
முறுவல் பூத்த முகம்

ஏதோ கதைக்கிறாள்
கனிவாய் கேட்கிறான்
கலையாத கவனமும்
மாறாத புன்னகையுமாய்
தவம் போல் மௌனம்
முழுதான அங்கீகாரம்
பேசுகிறாள் பேசுகிறாள்
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
விழிகளை விரித்து
விரல்களை அசைத்து
அபிநயம் பிடித்து
அனுபவித்து பேசுகிறாள்

என்னதான் பெருங்கதையோ
சிறுமியாய் கன்னியாய்
வளர்ந்த நாட்களோ
கைப்பிடித்து வந்த பின்
கண்டுவிட்ட புதுமைகளோ
பக்கத்து வீட்டு சங்கதியோ
உள்வீட்டு விவகாரமோ
பிறந்த வீட்டு பெருமைகளோ
புக்ககத்து புகார்களோ
கற்பனை முத்துக்களோ
எதிர்காலத் திட்டங்களோ
உலகத்து நடப்புகளோ
தொலைக்காட்சி தொடர்கள்
தாக்கத்தில் விமர்சனங்களோ
என்னதான் பேசினாள்
எட்ட இருந்த என் காதுக்கு
எட்டவில்லை அவள் குரல்

இதமான காற்று வெளியிலே
அவன் அமைதி அழகு
ஆமோதிக்கும் ரசனையில்
அனுசரணை தெரிந்தது
இயல்பான இசைவிருந்தது
பஞ்சு போல் மனதையாக்கும்
இன்பமான தருணங்கள்
அரிய அன்னியோன்யங்கள்
அவசியமான பொழுதுகள்
தாம்பத்ய இலக்கணங்கள்
விளக்கும் அக்கணங்கள்

மௌனத்தால் ஊக்கியவன்
மனமறிந்த மணவாளன்
மனம் திறந்த மணவாட்டி
அவளா பாரதி கண்ணம்மா
ஆம் புதுமைப் பெண்ணம்மா
உயிர் கலந்த தோழியம்மா
தோளமர்ந்த கிளியம்மா
தொய்வில்லா வாழ்வம்மா
கண் நிறைந்த காட்சியம்மா

அற்பமாய் அடித்துக் கொண்டு
குரோதத்தில் குமைந்து
விரோதங்கள் வளர்த்து
உறவு நலன் சிதைத்து
உருக்குலையும் குடும்பங்கள்
சின்னத்திரையில் மட்டுமே
என்னைச் சுற்றிய உலகத்தில்
சிங்கார சங்கீதம் இசைக்கிறது
கேட்டு மகிழ்வதென் பாக்கியம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community