Monday, October 12, 2015

மனம்

IndiBlogger - The Indian Blogger Community பல்லடுக்கு மாளிகை 
புதிரான என் மனம் 
பல்லாயிரம் அறையிலே 
உறையும் நினைவுகள் 
பலவித நிலையிலே 
பரந்து கிடக்குதே 

பயந்து பதுங்கி 
ஒளிந்து ஒதுங்கி 
உயர்ந்து ஓங்கி 
விரட்டித் துரத்தி 
வாட்டி வதைத்து 
வருடித் தடவி 

கடையும் மத்தாய் 
குடையும் வண்டாய் 
கொட்டும் குழவியாய் 
குற்றால அருவியாய் 
குளம்பிய குட்டையாய் 
செதுக்கும் உளியாய் 
சிதைக்கும் கழியாய் 
புதைத்த விதையாய் 
பறக்கும் சிறகாய் 
எம்பும் பந்தாய் 
எரிக்கும் நெருப்பாய் 
இதமாய் நிலவாய் 
ஆறா ரணமாய் 
ஆறிய வடுவாய் 
ஆழியுள் துரும்பாய் 
ஆலைக் கரும்பாய் 
உருகும் பாகாய் 
இளகா பாறையாய் 

மௌனங்கள் மெதுவாய் 
கால் பொத்தி நடக்கும் 
சப்தங்கள் அங்கு 
சதிராடிக் குதிக்கும் 
சகல சாகசமும் 
சட்டங்களாகும் 

மோனங்கள் தவங்கள் 
சமர்கள் விவாதங்கள் 
வேள்விகள் கேள்விகள் 
வேதங்கள் மந்திரங்கள் 
தன்னிலை விளக்கங்கள் 
தேடுகின்ற தகவல்கள் 

ஆழ்கடல் அமைதியாய் 
அமிழ்ந்து கிடந்தும் 
அலையோர இரைச்சலாய் 
பொங்கியும் நுரைத்தும் 
நிலையில்லா காற்றாய் 
நெருங்கியும் நகர்ந்தும் 

வினைகள் பலவாய் 
ஆரவார எண்ணங்கள் 
செய்கின்ற ஆட்சி 
தெரியாத காட்சி 
திரை மூடிய மேடை 
அரங்கேற்றும் நாடகம் 

கடைந்து முடியுமோ 
அமிர்தம் திரளுமோ 
மோதி முடிந்த பின் 
மோட்சம் கிட்டுமோ 
சிறுதுளி கரைந்து 
பெருவெளி எட்டுமோ 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community