Sunday, August 11, 2013

கிரீடங்கள் சாய்வதில்லை

IndiBlogger - The Indian Blogger Community 
கன்னி மயில் சீதை ஒரு நாள் சோலையிலே
தோழியருடன் களித்திருந்த வேளையிலே
காதல் கிள்ளையிரண்டு கைபிடிக்கவருவான்
அழகிய ரகுராமனென பேசியது கேட்டு 
மனமிக மகிழ்ந்த அரசகுமாரி சேடியரை
கவர்ந்து வரச்செய்தாள் அப்பறவையிரண்டை
கைக்குள் பிடித்துக் கொண்டாள் அப்பேடையை 
ஆவல் மிகக் கூவினாள் மேலும் சொல்லென்று
சேதி தந்த போதையில் கூட இருங்கள் என்னுடன்
கல்யாணராமன் வந்திடும் சுப நாள் வரை என்றாள்
மாளிகையின் சௌகரியம் தோதில்லை எம் வனத்திலே
முட்டையிட காத்திருக்கும் நேரமிதென்றது பேடை
பெட்டையை விட்டுவிடச்சொல்லி ஆண் கிளியும்
காட்டில் குஞ்சு பொறித்து வளர்த்ததும் வருவதாய்
கெஞ்சியும் கேளாமல் பிடிவாதமாய் பிடியை விடாத
பெண்ணரசியை மனம் கசந்து சாபமிட்டு உயிரை விட்டது
சிறைப்பட்ட அப்பாவி பெண் கிளி வயிற்றில் முட்டைகளுடன்
அது கண்ட ஆண் கிளியும் கங்கையிலே மூழ்கி மாய்ந்ததே
ஆண் கிளி அடுத்து அவதரித்தது அயோத்தியில் வண்ணானாய்
முற்பிறவி வன்மம் தீராமலே திரிந்த பொழுதிலே
இலங்கையிலிருந்து பிரிய சகி சீதையை மீட்டு வந்து
அரசாள அரியணையேறிய ராமனை அவன் மனையாளை
அவதூறாய் பேசியதை ரகசிய ஒற்றனும் கேட்டானே
ஊரெல்லாம் புகழ்ந்தாலும் ஒருவன் இகழ்ந்ததை
மறைக்க முடியாது தோற்றானே விதி வென்றதே
ஏனைய இளவல்கள் மறுத்து மூர்ச்சையாகி விட
தாயைக் கொன்ற தந்தை சொல் மீறா பரசுராமனொக்க
கதறக் கதறக் காட்டிலே தானும் கதறியபடியே இலக்குவன்
கரு சுமந்த உத்தமியை கபடறியா பேடையை சீதையை
கைவிட்டு வந்தானே காக்கட்டும் வால்மீகி முனியெனவே
சதியின் சுத்தமறியா பதியல்ல அரச பதவியின்
களங்கமில்லா பெருமையை சிரமேற்தாங்கியவன்
அக்கினியில் போட்டெடுத்த பொன்மயிலை பிரியவும்
சூல் கொண்ட இல்லாளை நாடு கடத்தவும் துணிந்தானே
லவனும் குசனும் வளர்ந்து வீரதீரமுடனே நிமிர்ந்து
புரவிகளையடக்கி அனுமன் ஆசியுடன் அன்னை கவசத்துடன்
அனைவரையும் வீழ்த்தி திறம் காட்ட அவர் குலம் மூலம்
அறிந்த மாமன்னன் வாரிசுகளை அணைத்துக்கொள்ள ஏங்கினான்
அன்னையை அருகே அமர்த்திட மீண்டும் அக்கினியை மூட்டினான்
மூத்த தாயாரெல்லாம் மனம் குமுறி பொங்கித் தவித்து தடுத்திட
பொறுத்துக்கிடந்தவள் அபலையவள் போதும் இனி சோதனைகள்
என்றெண்ணி ஆதரவாய் பிளந்த அன்னை பூமியின் மடி புகுந்தாள்

2 comments:

  1. கண்களில் கண்ணீர் நிறையவைக்கும் நிகழ்வுகள்...!

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதோ..!!???

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி, ஊழ்வினையைத் தவிர எனக்கு வேறு என்னென்னவோ புரிந்தது!

      Delete

IndiBlogger - The Indian Blogger Community